Saturday, 22nd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் நிபா வைரஸ் அறிகுறியுடன் 51 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

செப்டம்பர் 08, 2021 01:29

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது இந்நோய்க்கு 17 பேர் பலியானார்கள். அதன்பின்பு நோயின் தாக்கம் குறைந்தது.

2 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், அங்கு சிகிச்சை பலன் இன்றி கடந்த 5-ந் தேதி பரிதாபமாக இறந்தான்.

இதையடுத்து நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த அவனது பெற்றோர், உறவினர்கள், சிகிச்சை அளித்த சுகாதார பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. முதற்கட்டமாக சிறுவனுடன் நேரடி தொடர்பில் இருந்த 257 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 10 பேரின் ஆய்வு முடிவுகள் நேற்று வந்தன. அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

இதற்கிடையே நிபா வைரஸ் அறிகுறி இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்களில் 51 பேர் பலியான சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தனி வார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 17 பேருக்கு லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

நிபா வைரஸ் பாதிப்பால் இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தோர் சிலர் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து மலப்புரம், பாலக்காடு, கண்ணூர், வயநாடு, எர்ணாகுளம், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கும் சென்றது தெரியவந்தது. எனவே இந்த மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். இதில் 35 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்