Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

செப்டம்பர் 09, 2021 01:42

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு குறித்து, தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் தினசரி கரோனா பாதிப்பு 1,500 - 1,600-க்குள் பதிவாகி வருகிறது.இந்நிலையில், செப்.1 முதல் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் 2, 3-ம்ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் அனைத்துவெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடைதொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில்கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில்,கரோனா பரவல் சற்றே அதிகரித்துள்ளதாகவும், பள்ளிகளில் மாணவர்களிடையே சில இடங்களில்கரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கரோனா பரவல் தடுப்புகுறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்நிர்வாக ஆணையர் பனீந்திரரெட்டி,சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழகத்தில் தற்போதைய கரோனா பாதிப்பு நிலவரம், எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகள், பள்ளி, கல்லூரி திறப்புக்குப் பின் கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வரும் 12-ம் தேதி ஒரேநாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் என்றஇலக்கு அடிப்படையில், கேரள எல்லையோரத்தில் உள்ள 9 மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு10 ஆயிரம் சிறப்பு முகாம்கள்நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல்வருடனான ஆலோசனைக்குப் பின், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அதிகாரிகளுடன் தடுப்பூசி போடும் பணிகள் குறித்துதலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தினார். அதில், மாவட்ட வாரியாக கரோனாபாதிப்பு, தடுப்பூசி போடும் பணிகள், சிறப்பு முகாம்கள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்