Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 2-வது நாளாக தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

செப்டம்பர் 12, 2021 12:12

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் தினமும் ஒற்றை இலக்கத்தில் பதிவாகிவந்த தொற்று பாதிப்பு, படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. 7 ஆயிரத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஊரடங்கு, தடுப்பூசி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் அக்டோபர் மாதத்துக்குப் பின் படிப்படியாக குறைந்து 500-க்கு கீழ் வந்தது. அதேபோல் 100-ஐ நெருங்கியிருந்த உயிரிழப்புகளும் 4, 5 ஆக குறைந்தது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் கரோனா தொற்றின் 2-வது அலை பரவத் தொடங்கியது. முதல் அலையைவிட இதில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக கடந்த மே மாதம் 21-ம் தேதி 36,184 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அன்றைய தினம் 467 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 5,913 பேர் பாதிக்கப்பட்டதில் 109 பேர் இறந்தனர். மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துதல் போன்றவற்றால் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் குறையத் தொடங்கியது.

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்குள் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. பேருந்துகளை இயக்கவும், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் வழக்கம்போல் வெளியே சென்றுவரத் தொடங்கியுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியதால் தொற்று பாதிப்பு 1,550-க்கு கீழ் குறையத் தொடங்கியது.

இந்நிலையில் தமிழகத்தில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 1,630 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பாதிப்பு 1,639-ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், ஈரோடு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகியுள்ளது. கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், ரயில்கள் இயங்கி வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அதனால், தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இது கரோனா தொற்று மூன்றாவது அலை இல்லை. அதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்” என்றனர்.

தலைப்புச்செய்திகள்