Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

அக்டோபர் 22, 2021 12:47

சென்னை: இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்ளும் தமிழக கவர்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

தமிழக கவர்னராக உள்ள ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி பதவி ஏற்றார். பதவி ஏற்பதற்கு முன்பு டெல்லியில் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து விட்டு வந்திருந்தார்.

இந்தநிலையில் இன்று மாலை 5 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுகிறார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த அமைச்சர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

சனி, ஞாயிறு டெல்லியில் தங்கி இருக்கும் கவர்னர் திங்கட்கிழமை சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில் அது கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. கவர்னர் ஒப்புதல் அளித்த பின் அதை மத்திய அரசுக்கு அவர் அனுப்பி வைக்க வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவியை பார்த்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி விட்டு வந்தார். இந்த சூழலில் கவர்னர் டெல்லி செல்வதால் பிரதமரிடம் இதுகுறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்