Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த 2 மாதங்கள் மிக முக்கியமானது: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

நவம்பர் 01, 2021 12:29

சென்னை: 'மெகா தடுப்பூசி முகாம்களின் போது மட்டுமின்றி, இதர நாட்களிலும் கொரோனா தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக கலெக்டர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா தடுப்பூசி முகாம்கள் தவிர, இதர நாட்களிலும் தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்புபருவ மழையால் ஏற்படும் நீர், உணவு நோய்கள்மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். நோய்த் தடுப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.

முதல் நான்கரை மாதங்கள், குறைந்த அளவில் தடுப்பூசி போட்டதன் விளைவாக, தேசிய அளவு சராசரியில் தமிழகம் சரிவில் உள்ளது. எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரண்டாம் தவணை தடுப்பூசி போடுவதற்கான அவகாசம் முடிந்தும், போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வேண்டும். பண்டிகை நாட்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஹாராஷ்டிரா, இந்துார்நகரங்களில், உருமாற்றம்அடைந்த புதிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால், பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.வடகிழக்கு பருவ மழை காலத்தில், ஆண்டுதோறும் கடைசி மூன்று மாதங்கள் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும்.


இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், சேலம் உட்பட பல இடங்களில் அதிகரித்துள்ளது. எனவே, கொசு உற்பத்தியாகும் தண்ணீர் தேங்கும் இடங்கள், டயர்கள்,பிளாஸ்டிக் டப்பாக்கள், குப்பைத் தொட்டி உள்ளிட்ட பல்வேறு முறைகளில், கொசுப் புழுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்து ஒழிக்க வேண்டும்.சுற்றறிக்கைகொசு ஒழிப்பில், மாவட்டத்திற்கு தேவையான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையினர் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து, கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழைக் காலத்தில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். பாம்பு மற்றும் பூச்சி கடிகளுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

அடுத்து வரும் இரண்டு மாதங்களும், சுகாதாரத் துறைக்கு மிக முக்கியமான மாதங்கள். எனவே, நோயை தடுக்கும் வகையில், மாவட்ட அளவில் குழுக்கள் ஒன்றிணைந்து, நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு, கொரோனா மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்