![](admin/uploads/.5ceb7b0e305164.32952365.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாடசாமிக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
நேற்று புரோட்டா சால்னாவில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து மாடசாமிக்கு இந்திரா கொடுத்தார். பின்னர் உணவில் மருந்து வாசனை வருவதை அறிந்த மாடசாமி அவரிடம் கேட்டபோது, விஷம் கலந்திருப்பது உறுதியானது. பின்னர் மாடசாமி அக்கம் பக்கத்தினரிடம் விபரத்தை கூறினார். உடனடியாக அவர்கள் சோப்பு கரைசலை அவருக்கு கொடுத்து முதலுதவி செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
எனது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே தினமும் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறு செய்வார். மேலும் என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். இதில் ஆத்திரமடைந்த நான் அவருக்கு சால்னாவில் விஷம் கலந்து கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் இந்திராவை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.