Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரசிகர்கள் மிரட்டல்: புனித் ராஜ்குமாருக்கு கடைசி சிகிச்சை அளித்த மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு

நவம்பர் 09, 2021 02:02

பெங்களூரு: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கடைசியாக சிகிச்சை அளித்த மருத்துவர் ரமணராவுக்கு ரசிகர்கள் மிரட்டல் விடுத்ததால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த‌ 29‍-ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள், 'புனித் ராஜ்குமாருக்கு கடைசியாக சிகிச்சை அளித்தவர் அவரது குடும்ப மருத்துவர் ரமணராவ். அவருக்கு மருத்துவர் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. ஆபத்தான நிலையில் இருந்தவரை ஏன் ஆம்புலன்ஸில் அனுப்பவில்லை? மருத்துவரின் அலட்சியத்தாலே புனித் ராஜ்குமார் உயிரிழந்தார்'' என சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர்.

மேலும் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் இருவர், மருத்துவர் ரமணராவ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சதாசிவநகர் காவல் நிலையத்தில் இரு புகார் மனுக்களை அளித்துள்ளனர். மருத்துவர் ரமணராவ் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிடில், பெங்களூருவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

இதனால் கர்நாடகத் தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு, '' புனித் ராஜ்குமாரின் ரசிகர்களால் மருத்துவர் ரமணராவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்''என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, உள்துறை அமைச்சர், பெங்களூரு மாநகராட்சிக் காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து மருத்துவர் ரமணராவின் வீடு மற்றும் மருத்துவமனைக்குத் துப்பாக்கி ஏந்திய‌ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் ரமணராவ் கூறும்போது, ''புனித் ராஜ்குமார் எனக்கு மகனைப் போன்றவர். அவர் என்னை அப்பாஜி என்றே அழைப்பார். ராஜ்குமாரின் குடும்ப மருத்துவர் என்பதால் அவரை சிறுவயது முதலே தெரியும். அவரது இறப்பு ரசிகர்களைப் போலவே எனக்கும் பெரும் வேதனையைத் தந்துள்ளது.

புனித் ராஜ்குமார் இறந்த தினத்தன்று எனது மருத்துவமனையில் எவ்விதக் கால தாமதமும் செய்யவில்லை. அவர் வந்த நேரத்தில் மற்றொரு நோயாளியைப் பரிசோதித்துக்கொண்டு இருந்தேன். உடனடியாக நான் அவரை அழைத்து சிகிச்சையைத் தொடங்கினேன். இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் எல்லாம் முறையாக இருந்தது.

இ.சி.ஜி. எடுத்தபோது மாரடைப்புக்கான அறிகுறி தென்பட்டதால், அவரது மனைவி அஸ்வினியிடம் கூறி, விக்ரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறினேன். ஆம்புலன்ஸ் வரவழைத்து இருந்தால், வருவதற்கே குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் ஆகி இருக்கும். விக்ரம் மருத்துவமனைக்குச் செல்வதற்கு 10 நிமிடங்கள் ஆகி இருக்கும். இந்த காலதாமதத்தைத் தவிர்க்கவே அவரது காரிலேயே அனுப்பி வைத்தேன். ஆனால் அதற்குள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். அவரை என் மகனாக நினைத்தே சிகிச்சை அளித்தேன். எவ்வித அலட்சியமும் காட்டவில்லை'' என்று தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்