![](admin/uploads/.5f8017b6382e69.44737545.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேலம்: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து காவிரி வழியாக ஒகேனக்கலுக்கு வருகிறது.
ஒகேனக்கலுக்கு நேற்று மாலை 15 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை 19 ஆயிரத்து 146 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 14 ஆயிரத்து 812 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 16 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.