Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு

டிசம்பர் 05, 2021 02:08

புதுடெல்லி: டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தயிாவில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டோர் எண்ணிக்கை இன்று 5 ஆக உயர்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர், மற்றொருவர் 66 வயதானவர்.

ஒமைக்ரான் பாதிப்பு எவ்வாறு இருக்கும், வேகமாகப் பரவுமா, உயிரிழப்பை அதிகம் ஏற்படுத்துமா என்பது குறித்து இதுவரை எந்த இறுதியான தகவலும் இல்லை.

இந்தியாவில் நேற்று மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் நேற்று வரை ஒமைக்ரான் பாதிப்பு 4 ஆக இருந்தது.

இந்நிலையில், தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், "டெல்லியில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி தான்சானியாவில் இருந்து திரும்பியவர்’’ எனக் கூறினார்.

தலைப்புச்செய்திகள்