Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரையில் கர்ப்பிணி நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல். இவர் தனது வீட்டில் டாபர்மேன் வகையைச் சேர்ந்த பெண் நாயை வளர்த்து வருகிறார். குடும்பத்தில் ஒருவராக உள்ள அந்த நாயை பாசத்துடன் வளர்த்து வரும் சக்திவேல் அதனை கவனமாக பராமரித்து வருகிறார்.
சுஜி என பெயரிடப்பட்டுள்ள அந்த நாய் கர்ப்பமானது. இதையடுத்து நாய்க்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சக்திவேல் குடும்பத்தினர் செய்தனர்.
கலர் வளையல்கள், மாலை வாங்கப்பட்டது. நேற்று நாய்க்கு வளையல்கள், மாலை அணிவிக்கப்பட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு வழங்கும் 5 வகையான கலவை சாதம் நாய்க்கு பரிமாறப்பட்டது. அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.