Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெலிகாப்டர் விபத்தில் நடந்தது என்ன: பாராளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் விளக்கம்

டிசம்பர் 09, 2021 01:23

புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து பார்லியில் பிபின் ராவத் உள்ளிட்ட வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று (டிச.,08) நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 வீரர்கள் உயிரிழந்தனர்.
பிபின் ராவத் மறைவுக்கு பார்லிமென்டில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். லோக்சபாவில் ராஜ்நாத் பேசியதாவது: கோவை சூலூரில் இருந்து காலை 11.48 மணிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பியுள்ளனர். வெலிங்கடனில் தரையிறங்குவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னதாக விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடப்பற்கு முன்னர் கட்டுப்பாட்டை இழந்த உடன் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து முப்படை விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது. விபத்து தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான விசாரணை துவங்கியுள்ளது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் தலைநகர் டில்லியில் தகனம் செய்யப்படும். ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளில் ஒருவரான வருண் சிங் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உயிர்காக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்