Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று மாலை விநாடிக்கு 12 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் அணைக்கு நீர்வரத்து அதே அளவு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 400 கன அடி தண்ணீர் கால்வாய் பாசனத்துக்கும் வெளியேற்றப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் 13-ந்தேதி அணை முழு கொள்ளளவான 120 அடியை தண்ணீர் எட்டியது. இதையடுத்து மறுநாள் (14-ந் தேதி) முதல் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் கடந்த 29 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.