Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் கணவரை அடித்து கொன்று வீட்டுக்குள் புதைத்த பெண்

டிசம்பர் 20, 2021 04:15

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பெரின்சேரி பகுதியை சேர்ந்தவர் மன்சூர் மாலிக். இவரது மனைவி ரேஷ்மா பீவி. இருவரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்சூர் மாலிக் திடீரென மாயம் ஆனார். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் கேட்டபோது ரேஷ்மா பீவி அவரை காணவில்லை என்று கூறினார்.

இது குறித்து ரேஷ்மா பீவி திருச்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் ரேஷ்மா பீவியின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியாக அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் விசாரித்தபோது,

கணவர் மன்சூர் மாலிக்கை நண்பர் ஒருவருடன் சேர்ந்து அடித்து கொன்று வீட்டிற்குள் புதைத்துவிட்டதாக போலீசாரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் மன்சூர் மாலிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரேஷ்மா பீவி, அவரது கணவர் மன்சூர் மாலிக் இடையே சுமூக உறவு இல்லை. இதனால் அடிக்கடி சண்டையிட்டுள்ளனர். மேலும் மன்சூர் மாலிக் அடிக்கடி ரேஷ்மா பீவியை தாக்கியுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வீட்டில் வைத்து அடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்