Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பாஜக உதவ வேண்டும்: அமைச்சர் சேகர் பாபு

ஜனவரி 03, 2022 11:41

நாமக்கல்: தமிழகம் முழுதும் 1,640 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள், 437 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன,'' என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த ஜெயந்தி விழாவில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, மலைப்பாதை அமைக்கும் பணி மீண்டும் துவக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் விரைவில் முடிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஆங்கில புத்தாண்டின் போது, அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த அரசு, ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல; ஆன்மிகவாதிகளையும் அரவணைத்து செல்லும் அரசு.நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பணியாளர்களுக்காக, குடியிருப்புகள் ஏற்படுத்தி தரப்படும். கோவில் அருகில், பக்தர்கள் தங்குமிடம் ஏற்படுத்த முதல்வரின் பரிசீலனைக்கு எடுத்து செல்லப்படும். திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி கோவில்களில், நீதிபதிகள் முன்னிலையில் தங்கத்தை பிரிக்கின்ற பணி நடந்து வருகிறது.நீதிமன்ற அனுமதி பெற்று, கோவில் அறங்காவலர்கள் குழு அமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலைக்கு எடுத்து சென்று, அந்த தங்கம் உருக்கப்பட்டு டிபாசிட்டில் வைக்கப்படும். அந்த நிதி சம்பந்தப்பட்ட கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கு, ரோப்கார் வசதி செய்ய ஆய்வு நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 1,640 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் 437 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 'இறை சொத்து இறைவனுக்கே' என்ற அடிப்படையில், ஆக்கிரமிப்பில் வைத்துள்ளவர்கள், அவர்களாகவே முன்வந்து நிலத்தை கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும்.

கடந்த 2015ல், உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி, ஆகம விதிப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும், கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் 24 பேருக்கு அர்ச்சகர் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு முதல்வர் ஆதரவு கொடுப்பார். தேவையில்லாத திட்டங்களுக்கு துணிந்து எதிர்ப்பு குரல் கொடுப்பார். இது ஆன்மிக பூமி என்றும், திராவிட நாடு என்பதையும் கருத்தில் கொண்டு, முதல்வர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு உதவ வேண்டும். ஹிந்து சமய அறநிலையத் துறை முன்னெடுக்கும் நலத்திட்டங்களுக்கு, பா.ஜ.,வினர் தான் நீதிமன்றம் சென்று தடை பெறுகின்றனர். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

தலைப்புச்செய்திகள்