![](admin/uploads/.5e8abdcabfc9a7.12766855.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கன்னியாகுமரி; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அப்பட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். நடன ஆசிரியரான இவருக்கு ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் நடன ஆசிரியராக பணிபுரியும் பள்ளியில் நடன பயிற்சிக்காக வந்த மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கோவில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடன நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் உன்னை சினிமாவில் ஹீரோயின் ஆக்குகிறேன் என்றும், தனக்கு பல துணை இயக்குநர்களை தெரியும் எனவும் மாணவியிடம் கூறி உள்ளார். மாணவியும் ஹீரோயின் கனவில் அஜித்குமாருடன் காதல் வயப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி, மாணவியை தொடர்பு கொண்ட அஜித்குமார், துணை இயக்குநர்கள் உன்னை காண அழைத்துள்ளதாகவும், அதற்கான ஆடிஷன் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய மாணவி அஜித்குமாருடன் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டணத்திற்கு சென்றுள்ளார் அங்கு ஒரு வீட்டில் மாணவியை தங்க வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார் அஜித்குமார்.
பிறகு இது துணை இயக்குநர் வீடு என்றும் அவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள் எனக்கூறி, தனது நண்பருக்கும் மாணவியை விருந்தாக்கியுள்ளார். பின்னர், அந்த மாணவியை சென்னை அழைத்து சென்ற அவர்கள், உனக்கு சரியாக நடிக்கவரவில்லை எனவும், நீ இன்னும் மேடை நாடகங்களில் நடித்து பயிற்சி பெற வேண்டும் என்றும் கூறி மீண்டும் காயல்பட்டணம் அழைத்து வந்துள்ளனர். மாணவியிடம் அங்குள்ள கலைஞர்கள் அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, தனது மகளை காணவில்லை என மாணவியின் தாயார், தக்கலை போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், அஜித்குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, இதுபற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார். இதையடுத்து நடன கலைஞர் அஜித்குமாரின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போலீசார், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் விசாரித்தனர்.
அப்போது, ராஜபாளையம் பகுதியில் கோவில் திருவிழாவில் மாணவியுடன் அஜித்குமார், ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், இருவரையும் மீட்டு மார்த்தாண்டம் மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சினிமா ஆசை காட்டி, பள்ளி மாணவியை சீரழித்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.