Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செய்னாவிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்

ஜனவரி 12, 2022 10:34

புதுடெல்லி: பாட்மின்டன் வீராங்கனையை தரக்குறைவாக விமர்சித்த நடிகர் சித்தார்த், தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குளறுபடிகளால் பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பினார். பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதற்கு இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பாய்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள சித்தார்த், பெண்களை அவமதிக்கும் வகையில் செய்னாவை விமர்சித்தார்; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தன்னுடைய பதிவிற்கு சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக செய்னாவிற்கு அவர் எழுதிய மன்னிப்பு கடிதத்தில் கூறியுள்ளதாவது: சில நாட்களுக்கு முன்பு உங்கள் பதவிற்கு நான் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் பதிவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது.

என்னால் அதை விடச் சிறப்பாகப் பேச முடியும் என்பதை நான் அறிவேன். எந்தவொரு ஜோக்கையும் விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக் இல்லை என்ற சொற்றொடர் உள்ளது. எனவே, அந்த ஜோக்கிற்கு என்னை மன்னிக்கவும். இருப்பினும், எனது பதிவானது, வார்த்தை விளையாட்டு மற்றும் நகைச்சுவையானது மட்டுமே. அதற்கு அனைத்து தரப்பினரும் கூறும் வகையிலான உள்நோக்கம் எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் கூறிக்கொள்கிறேன்.

நான் எப்போதும் பெண்ணியவாதிகள் பக்கம் இருப்பவன். ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக எனக்கு இல்லை என்றும் நான் உறுதியளிக்கிறேன். எனவே, இத்துடன் இந்த விஷயத்தை நாம் விட்டுவிடலாம் என நம்புகிறேன். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள். இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்