Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகவின் நற்பெயருக்கு எந்த கொம்பனாலும் களங்கம் ஏற்படுத்திவிட முடியாது: ஜெயக்குமார்

ஜனவரி 20, 2022 01:07

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே திமுக அரசு ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சேதனை நடத்தி வருவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "அதிமுகவை அழித்துவிட வேண்டும். அதிமுகவின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவினருக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் லஞ்ச ஊழல் பேர்வழிகள் என்றொரு போலியான ஒரு மாயை அதாவது செயற்கையான ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்ற திட்டமிட்ட முனைப்போடு காவல்துறையை ஏவிவிட்டு, இன்றைக்கு பழிவாங்குகின்ற செயலை திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.

பொங்கல் பரிசு என்ற பெயரில் குப்பையைத்தான் கொடுத்தார்களே தவிர, பொங்கல் பரிசு கொடுக்கவில்லை. தரமற்ற பொருள்களைத் தரவில்லை என்பதால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை திசை திருப்ப மக்களை அதனை மறக்கடிக்கச் செய்யும் வகையில், கோயபல்ஸ் பாணியில் ஆளும் திமுக அரசு கையாண்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிமுகவின் புகழுக்கும், நற்பெயருக்கும் எந்தவொரு கொம்பனாலும் களங்கம் ஏற்படுத்திவிட முடியாது" எனத் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்