![](admin/uploads/.6059fa7d5b4400.73554554.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர்: சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ். இவர் புதுப்பாளையம் கிராமத்தில் கூலி வேலைக்காக சென்ற போது, அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இதுகுறித்து தனது அம்மா செல்வியிடம் சிறுமி கூறியதையடுத்து, உறவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அடைக்கலராஜிக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் சிறுமி பிரசவத்திற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் கார்த்திகேயன் சிறுமியிடம் விசாரணை செய்தார். இதையடுத்து குழந்தை திருமணம் செய்ததாக அடைக்கலராஜ் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அடைக்கலராஜின் தந்தை ராமசாமி, சிறுமியின் அம்மா செல்வி ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அடைக்கலராஜ் தந்தை ராமசாமி மற்றும் சிறுமியின் அம்மா செல்வி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.