Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்

பிப்ரவரி 08, 2022 07:03

சென்னை: நீட் தேர்விற்கு எதிரான தமிழக அரசின் சட்ட போராட்டம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் உரைக்கு பின்னர், நீட் விலக்கு கோரும் மசோதா, சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 8-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி நேற்று தமிழக சட்டசபை நடைபெற்றது.
கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நீட் தேர்வு அரசியல் சாசனப்படி ஏற்படுத்தப்பட்ட தேர்வு அல்ல. இந்த தேர்வு, ஆள் மாறாட்டம், விடைத்தாள் திருத்தம் என அனைத்து வித முறைகேடுகளும் நடந்தது. இது குறித்து சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீட், தேர்வு முறை அல்ல.பயிற்சி முறை. இது முறையான தேர்வு அல்ல. அது ஒரு நவீன தீண்டாமை.தனியார் பயிற்சி மையங்களை மட்டுமே ஊக்குவிக்கும்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பரிந்துரை அடிப்படையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை திருப்பி அனுப்பியதற்காக, கவர்னர் கூறிய காரணங்கள் ஏற்புடையது அல்ல.இந்த 5 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வுக்கு முன் 90 சதவீத இடங்களை மாநில பாட திட்ட மாணவர்களை பெற்று வந்தனர்.

 நீட் தேர்வு பாகுபாடு காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டம் சமூகநீதியை வலியுறுத்துகிறது. ஆனால், நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம், சட்டத்தின் நீதியைப் பேசுகிறது. ஆனால், நீட் தேர்வு, பணக்கார நீதியைப் பேசுகிறது. நீட் தேர்வு, சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அனைத்து அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது நீட் தேர்வு. அதனால்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். சட்டசபை தீர்மானத்தை கவர்னரால் நிறுத்தி வைக்க முடியும் என்றால், மற்ற மாநிலங்களின் கதி என்ன.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை தமிழக அரசின் சட்ட போராட்டம் ஓயாது. கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் காட்சியாக சமீப காலமாக நடந்து வரும் காட்சிகள் நிகழ்ந்து வருகிறது.வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறாமல் விட போவது இல்லை.
பார்லிமென்டோடு முரண்படும் சட்டத்தை சட்டசபை இயற்றினால், அதனை ஜனாதிபதிக்கே அனுப்பி வைக்க வேண்டும். மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் தமிழக சட்டசபை புதிய வரலாறு படைக்க உள்ளது. 

ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது கவர்னரின் கடமை. கவர்னர் இதனை கவர்னர் சரியாக செய்வார் என எதிர்பார்க்கிறேன். நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவிற்கு ஒளி விலக்கு ஏற்றி வைக்க உள்ளோம் என  முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது நீட் தேர்வு முறையானது என்று ஆளுநர் கடிதம் அனுப்பி உள்ளார். உயர்மட்ட குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்று அவர் கூறி உள்ளார்.

காமாலை கண்ணால் பார்ப்பது போன்று ஒரு தலைபட்சமான முறையில் குழுவின் அறிக்கை உள்ளது என ஆளுநர் கூறியுள்ளார். உயிரியல், வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே மாநில பாடத்திட்டம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொது வெளியில் வெளியிட்டது உகந்ததா? என்று சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். எனது பொறுப்பில் இருந்து நான் கடுகளவும் தவற மாட்டேன்.
இங்கு பேசுகின்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவு மீதான கருத்துக்களை மட்டும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தனிப்பட்ட முறையில் ஆளுநரைப் பற்றி கண்டிப்பாக இங்கே பேசக்கூடாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன். எனக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தை செய்தி உரையாக பேரவையில் முன் வைக்கிறேன் என்றார்.அதன் பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் நீட் விலக்கு மசோதா தொடர்பாக நடத்தப்பட்ட அரசின் ஆய்வுகளை விளக்கமாக கூறினார்.

பிறகு கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து இருப்பது சரியானது அல்ல. அவர் செய்த மதிப்பீடுகள் தவறானவை என்று குறிப்பிட்டார். அவர் பேசி முடித்ததும் அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒவ்வொருவராக பேசினார்கள். 

சட்டசபை சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டதை அனைத்துக் கட்சி தலைவர்களும் வரவேற்றனர்.
ஆனால் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் கவர்னரின் நடவடிக்கையை ஆதரித்து பேசினார்கள்.

அனைத்துக் கட்சி தலைவர்களும் பேசி முடித்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில், “நீட் தேர்வு என்பது பலி பீடம் போன்றது. பாராளுமன்றத்தில் முரண்பட்ட சட்டம் இயற்றப்பட்டால் அதற்கு எதிராக மசோதா கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை உள்ளது.நீட் விலக்கு மசோதாவில் தமிழகம் உறுதியாக உள்ளது. இந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பி இருப்பதன் மூலம் சட்டசபை இறையாண்மை கேள்விக்குறியாகி உள்ளது. நீட் விலக்கு மசோதாவை தமிழகம் மீண்டும் நிறைவேற்றி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒளிவிளக்கை ஏற்றி வைத்து இருக்கிறோம்” என்று பேசினார்.

அதன்பிறகு மதியம் 12.57 மணிக்கு நீட் விலக்கு மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பி குரல் ஓட்டெடுப்பு நடத்தினார். அதில் நீட் விலக்கு மசோதா மீதான தீர்மானம் மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து தீர்மானத்தை நிறைவேற்றி தர கோரி பேசினார். அதன் அடிப்படையிலும் நீட் விலக்கு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இறுதியில் பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை சபை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார். அதுவும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டசபை மீண்டும் கூடும் நாள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். சட்டசபையில் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உரிய விளக்கங்களுடன் மீண்டும் கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தலைப்புச்செய்திகள்