Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணாமலை எந்த பிரச்சினையை கையில் எடுத்தாலும் கையை சுட்டுக் கொள்கிறார்

பிப்ரவரி 15, 2022 09:31

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இவ்வழக்கை பொறுத்தவரை, தற்கொலை நிகழ்ந்தவுடனே தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி. சரியான திசையில் விசாரணையை மேற்கொண்டு வந்தது. 

இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தை முழுமையாக அறியாமல் நீதிபதி ஜி.ஆர். சுப்பிரமணியம் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஆணையிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த உத்தரவு தமிழக பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றியாகக் கருதி அண்ணாமலை  மகிழ்ச்சிக் கடலில் நீந்த முற்பட்டிருக்கிறார். எந்த பிரச்சினையை கையில் எடுத்தாலும் கையை சுட்டுக் கொள்கிற அண்ணாமலை, இந்த பிரச்சினையை மிகப்பெரிய வெற்றியாக  நினைத்து புளகாங்கிதம் அடைகிறார்.

தமிழக அரசை பொறுத்தவரை, மடியில் கனம் இல்லாததால் சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறது. வழக்கில் உண்மை வெளியே வர வேண்டும். தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. விசாரித்தாலும், சி.பி.ஐ. விசாரித்தாலும் உண்மைநிலை வெளிப்பட வேண்டும். இதில் பா.ஜ.க. மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

சமீபத்தில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதற்குப் பிறகும் இதில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அண்ணாமலையும், மற்றவர்களும் கற்பனைகளை நாள்தோறும் அவிழ்த்து விடுகிறார்கள். இதை வைத்துக் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடலாம் என பா.ஜ.க. கனவு காண்கிறது. ஆனால், மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் எத்தகைய படுதோல்வியை தமிழக மக்கள் பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு வழங்கினார்களோ, அதைவிட கூடுதலான தோல்வியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும்; வழங்கப் போவது உறுதி. இதன்மூலம் உரிய பாடத்தை பா.ஜ.க., அ.தி.மு.க. பெறப் போகிறது.

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், தமிழக முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட பா.ஜ.க.வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். எந்த பிரச்சினையிலும் தமிழக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து வருகிற தமிழக பா.ஜ.க., இப்பிரச்சினையை கையில் எடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது வீட்டை முற்றுகையிட முயன்றது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகும். உச்சநீதிமன்றத்தில் உரிய ஆணை வழங்கிய பிறகும் முதலமைச்சரிடம் நீதி கேட்டு போராடுவது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

எனவே, தமிழக மக்களின் நலனிற்கு விரோதமாக செயல்படுகிற அண்ணாமலை, எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் எந்தவித பலனும் கிடைக்காமல் அவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் எதிர்காலமே இல்லாத ஒரு கட்சியாக பா.ஜ.க. விளங்கி வருகிறது. இதை அண்ணாமலை உணர வேண்டும் என கே.எஸ். அழகிரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்