Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூடங்குளத்தில் அணு கழிவுகளைச் சேகரிக்கும் மையம் அமைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின் கடிதம்

பிப்ரவரி 18, 2022 10:52

சென்னை: தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தினை அமைத்திடும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (18-2-2022) கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும்  பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொது மக்களிடையே உள்ள கவலையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,  இந்தத் திட்டத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஆறு அணுமின் உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த ஆறு அலகுகளில், அலகுகள் 1 மற்றும் 2 ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன என்றும், அலகுகள் 3 மற்றும் 4 கட்டுமானத்தில் உள்ளன என்றும், அலகுகள் 5 மற்றும் 6 இன்னும் நிறுவப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், ஆறு அணுமின் உலைகளிலிருந்து உருவாகும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, அணு உலைக்கு அப்பால் (Away from reactor) சேமித்து வைப்பதற்கான வசதிகளை அமைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், அலகுகள் 1 மற்றும் 2-க்கு முன்பு அனுமதி அளித்தபோதே, இரண்டு அலகுகளில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, தற்காலிகமாக அணுமின் நிலைய வளாகத்திற்குள் (உலையில்) சேகரித்து, சேமித்து, பின்னர் அதன் சொந்த நாடான ரஷ்யாவிற்கே திருப்பியனுப்பிட ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பின்னர் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, அணு உலைக்கு அப்பால் (Away from reactor) சேமித்து வைப்பதற்கான வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்திட முடிவு செய்யப்பட்டது என்றும், மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள், அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் ஆபத்துகள் தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட தமிழக மக்களின் ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் தாம் பகிர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், உலகெங்கிலும் பல இடங்களிலுள்ள இதுபோன்ற வசதிகள் விபத்துகளை எதிர்கொண்டுள்ளன என்றும், சுற்றுச்சூழல் மற்றும் அத்தகைய ஆலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பேரழிவினை ஏற்படுத்திட வழிவகுத்திடும் என்றும் தெரிவித்துள்ளார்.  
 

தலைப்புச்செய்திகள்