Monday, 24th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: மணிப்பூர், கோவாவை போல தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மறுபடியும் நமது நாடு ஒருமித்த குரலில் பிரதமர் மோடியுடன் பயணிப்போம் என்ற உறுதியான வார்த்தையை பதிவு செய்துள்ளது. உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் உரக்க சொல்லி இருக்கிறது. உ.பி.,யில் 33 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இது சரித்திரம் இல்லையென்றால், எது சரித்திரம்? கடந்த 6 மாதமாக மாற்றம் வரப்போகிறது என எதிர்க்கட்சியினர் கூறிவந்தனர். கொரோனா பாதிப்பை பிரதமர் மோடி கையாண்ட விதத்திற்கு கிடைத்துள்ள வெற்றி இது.
தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு மாற்று இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளன. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆளும் மீதமுள்ள இரு மாநிலங்களிலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராகிவிட்டதாக தேர்தல் கமிஷனர் கூறி இருக்கிறார். இதனால் தமிழகத்தில் 2024 அல்லது 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெறலாம். மணிப்பூர், கோவாவை போல தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும். கல்வி கொள்கை, உக்ரைன் மாணவர்கள் விவகாரத்தில் திமுக அரசு தனித்து செயல்படுவது சரியான போக்கு அல்ல. மத்திய அரசோடு முதல்வர் ஸ்டாலின் இணைந்து செயல்படுவார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.