Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: 5 மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை தக்க வைத்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது.
இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது: பா.ஜ., மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. உ.பி., அவர்கள் ஆளும் மாநிலம். அகிலேஷின் பலம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 42 ஆக இருந்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. பா.ஜ.,வின் வெற்றியில் மாயாவதி, ஒவைஸி ஆகியோருக்கு பங்கு உண்டு. எனவே, அவர்களுக்கு பத்மவிபூஷன், பாரத் ரத்னா விருது வழங்கலாம்.
பா.ஜ., நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றதால், எங்களுக்கு கவலை இல்லை. உத்தரகண்ட் முதல்வர் தோல்வி அடைந்தது ஏன்? கோவாவில் 2 துணை முதல்வர்களுக்கு தோல்வி ஏற்பட்டது ஏன்? மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் பஞ்சாப். தேசிய கட்சியான பா.ஜ.,வை பஞ்சாபில் மக்கள் முற்றிலும் நிராகரித்து உள்ளனர்.
பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் என அனைவரும் தொடர்ந்து பஞ்சாபில் பிரசாரம் மேற்கொண்டனர். அப்படி இருந்தும் அவர்கள் பஞ்சாபில் தோல்வி அடைந்தது ஏன்? உ.பி., உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் ஏற்கனவே உங்களது ஆட்சியில் தான் இருந்தது. ஆனால், உ.பி.,யில் காங்கிரஸ், சிவசேனா அடைந்த தோல்வியை போல், பஞ்சாபிலும் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.