Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் யானைகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகத்திற்குட்பட்ட திம்மே தொட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரப்பா(வயது 50).
இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது தோட்டத்தில் ராகி புல்களை போட்டு வைத்திருந்தார். அப்போது அவருடன் ஆடு, மாடுகளும் இருந்துள்ளன. இந்த நிலையில் மாரப்பா இரவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு பெண் யானை ஒன்று வந்துள்ளது.
இதையடுத்து சத்தம் கேட்டு அவர் எழுந்து பார்த்தபோது யானை அவரை நோக்கி வந்துள்ளது. இதனால் ஆடு,மாடுகள் மற்றும் தன்னை யானை எதுவும் செய்துவிடக்கூடாது என்று நினைத்த விவசாயி மாரப்பா தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து யானையை நோக்கி சுட்டுள்ளார். இதில் யானைக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து யானை அங்கிருந்து சென்றது. இந்தநிலையில் நேற்று பனை காப்புக்காடு பகுதியில் குண்டடிபட்ட பெண்யானை இறந்து கிடந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் ஜவளகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட வனஅலுவலர் கார்த்திகேயினி, வனச்சரகர் சுகுமார், கால்நடை டாக்டர் பிரகாஷ் வனவர் செல்வராஜ் மற்றும் வனத்துறையினர் சென்று பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது யானையின் நெற்றியில் துப்பாக்கி குண்டு இருந்ததும், சுட்டு கொன்றது விவசாயி மாரப்பா என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து யானையின் உடலை அங்கேயே அடக்கம் செய்தனர்.இதை தொடர்ந்து யானையை சுட்டு கொன்ற விவசாயி மாரப்பாவை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து மாரப்பாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் கொண்டு அடைத்தனர். தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் யானைகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே அனுமதியி ல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்களை கண்டறிந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூகஆ ர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.