Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : 'மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது போல, விஷம பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜ். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக, மர்ம நபர்கள், பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். 'வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு, 12 சதவீதம் ஜி.எஸ்.டி., வரும்; இது கவுன்சில் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படும்' என, நிர்மலா சீதாராமன் கூறியது போல அவரது படத்துடன் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல 'ஊட்டி ரயில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3,000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள், ஊட்டிக்கு செல்ல ஏன் ஆசைப்பட வேண்டும்?
'கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும், பொது போக்குவரத்தை புறந்தள்ளி தனி வாகனம் வாங்கும் மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்' என, அவர் கூறியது போலவும், இதை, 'டிவி' சேனல்கள் வெளியிட்டு இருப்பது போலவும் விஷம பிரசாரம் செய்கின்றனர். இதன் பின்னணியில் பயங்கரவாத சக்திகள் இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த, பா.ஜ., பிரமுகர் முகமது அதுல்லா நேற்று புகார் அளித்தார்.அதில், 'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் இவரது குடும்பத்தார் பற்றி, தி.மு.க., பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதுாறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.