Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செல்போனில் தொடர்ச்சியாக ஆன்லைன் கேம்: மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி மாணவன்

ஏப்ரல் 07, 2022 11:24

நெல்லை: செல்போனில் தொடர்ச்சியாக ‘ஆன்லைன் கேம்’ விளையாடியதால் பள்ளி மாணவருக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவிய கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முற்றிலுமாக மூடப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதனை காரணம் காட்டி பெரும்பாலான மாணவ- மாணவிகள் அதிக நேரம் செல்போன் உபயோகித்து வருகின்றனர். அப்போது பப்ஜி, ப்ரீ பயர் உள்ளிட்ட விளையாட்டுகளை டவுன்லோடு செய்து 24 மணி நேரமும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வருகின்றனர்.

இதுபோன்ற விளையாட்டுகளால் பெரும்பாலான சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. அதிக நேரம் செல்போனில் ஒரே விளையாட்டை விளையாடி தூக்கத்திலும் அவர்கள் அதுபோன்ற செய்கைகளையே செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் இதுபோன்று விளையாட்டுக்கு அடிமையாகி ஏராளமான பள்ளி குழந்தைகள் பாதிப்பு அடைந்துள்ளனர். அதில் ஒருவர் தான் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன்.

கடந்த 4-ந்தேதி நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அந்த மாணவன் நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு மயங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டான். அவன் கைகளை துப்பாக்கியால் சுடுவது போன்றும், தாக்குவது போன்றும் செய்கைகள் காண்பித்தபடி மயக்க நிலையில் அழைத்து வரப்பட்டான். உடனே அவனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

இது தொடர்பாக அங்குள்ளவர்கள் அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அளித்த பதில் மிகவும் அதிர்ச்சியடைய செய்தது. ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் அவனுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

தொடக்கத்தில் சிறிது நேரம் பொழுது போக்குவதற்காக பப்ஜி விளையாட்டு விளையாடிய மாணவன் அதன் பின்னர் நள்ளிரவு வரையிலும் அதே விளையாட்டை விளையாடி வந்துள்ளான். அதன் காரணமாக ஏற்பட்ட விபரீதத்தால் அந்த விளையாட்டிற்கு அடிமையாகிய மாணவன் மயக்கம் அடைந்து விட்டான்.

அதனை தொடர்ந்து அவன் மயக்க நிலையிலும் பல்வேறு செய்கைகள் காண்பித்துள்ளான் என்றும், அதன் காரணமாகவே அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மாணவனுக்கு நீர் ஆகாரம் கொடுப்பதற்காக அவனுக்கு தொண்டைக்குள் டியூப் வைப்பதற்கு டாக்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக மாணவனின் பெற்றோரிடம் பேசி உள்ளனர்.

அப்போது அங்கு மயக்க நிலையில் இருந்த அந்த மாணவன் திடீரென எழுந்து எனக்கு ஒன்றும் செய்யவில்லை. என்னை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று கூறி அங்கிருந்து அதிகாலை 3 மணி அளவில் பெற்றோருடன் சென்று விட்டான்.

இதற்கிடையே மாணவன் மயக்க நிலையில் செய்கை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய இது போன்ற விளையாட்டுகள் மாணவர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறது.

இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டாம் என அரசு அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். மேலும் இதுபோன்ற சில செயலிகளையும் மத்திய அரசு தடை செய்துள்ளது. அதையும் மீறி மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளை நீண்ட நேரம் பயன்படுத்துவதை கண்காணித்து தடுக்க வேண்டியது மாணவர்களின் பெற்றோரது கடமை என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்