Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5-வது கட்ட தேர்தலில் சராசரியாக 63 சதவீதம் ஓட்டு பதிவு

மே 07, 2019 05:10

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல்கள் நடைபெறுகிறது. இதில் 5-வது கட்டமாக நேற்று உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜ்நாத்சிங், ஸ்மிரிதி இரானி ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அனந்த்நாக் தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ரோஹ்மூ வாக்குச்சாவடியில் வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனாலும் இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாக்குதல் மிரட்டல் காரணமாக 2 தொகுதிகளில் உள்ள 320 வாக்குச்சாவடிகளில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் இரவு 8 மணி நிலவரப்படி 17.07 சதவீத வாக்குகளே பதிவானது.

மேற்கு வங்காளத்தில் 7 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் பராக்போர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஒரு வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றதால் தகராறு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. இதில் பா.ஜனதா வேட்பாளர் அர்ஜூன் சிங்கை தடுத்ததால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதேபோல ஹூக்ளி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மற்றவர்களுக்காக வாக்களித்ததாக புகார் எழுந்தது. இதனை பா.ஜனதா வேட்பாளர் லாக்கெட் சட்டர்ஜி தடுக்க வலியுறுத்தி தேர்தல் அதிகாரியை மிரட்டியதாகவும் சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த பிரமுகர் வெளியேற்றப்பட்டார். பாங்கோன், அவுரா ஆகிய தொகுதிகளிலும் சிறு தகராறுகள் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் சராசரியாக 74.42 சதவீத ஓட்டுகள் பதிவானது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் காலையிலேயே வாக்களித்தனர். இங்கு பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலை செய்யவில்லை என்ற புகார்கள் எழுந்தது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தூண்டுதலால் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படுவதாக பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிரிதி இரானி கூறியிருந்தார். ஆனால் அவர் இதுதொடர்பாக எழுத்துமூலம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. மாநிலத்தில் சராசரியாக 57.06 சதவீத ஓட்டுகள் பதிவானது.

பீகார் மாநிலம் சரண் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை சேதப்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் வேறு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் புறக்கணிப்பு, மின்னணு எந்திரங்கள் கோளாறு போன்ற சிறு பிரச்சினைகள் தவிர இங்குள்ள 5 தொகுதிகளிலும் அமைதியாக தேர்தல் நடைபெற்றது. இங்கு சராசரியாக 57.76 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 2 முன்னாள் ஒலிம்பிக் வீரர்களான மத்திய மந்திரி ராஜ்யவர்த்தன்சிங் ரத்தோர், காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணபூனியா ஆகியோர் களத்தில் உள்ளனர். இங்கு தேர்தல் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இங்குள்ள 12 தொகுதிகளில் சராசரியாக 63.69 சதவீத ஓட்டுகள் பதிவானது.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 139 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு காரணமாக மாற்றப்பட்டன. மற்றும் சில எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் சரிசெய்யப்பட்டன. இங்கு மத்திய மந்திரி வீரேந்திரசிங் காதிக் முக்கிய வேட்பாளராக உள்ளார். இங்குள்ள 7 தொகுதிகளில் சராசரியாக 64.61 சதவீத ஓட்டுகள் பதிவானது.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 4 தொகுதிகளில் சராசரியாக 64.60 சதவீத ஓட்டுகள் பதிவானது.

5-வது கட்டமாக தேர்தல் நடைபெற்ற 51 தொகுதிகளிலும் சராசரியாக 63.50 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. இந்த தேர்தலுடன் இதுவரை மொத்தம் 424 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. எஞ்சிய 118 தொகுதிகளுக்கு வருகிற 12 மற்றும் 19-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள வேலூர் தொகுதியில் மட்டும் அதிகளவில் பணம் கைப்பற்றப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்