Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோழிக்கோடு: கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் கிறிஸ்துவ பெண் நிர்வாகி, டி.ஒய்.எப்.ஐ., அமைப்பின் இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்ததற்கு, கிறிஸ்துவ மதத்தினர் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் நிர்வாகி ஜோத்ஸ்னா மேரி ஜோசப், சவுதி அரேபியாவில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இவர், சமீபத்தில் டி.ஒய்.எப்.ஐ., எனப்படும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உள்ளூர் நிர்வாகியான ஷெஜின் என்ற இஸ்லாமிய இளைஞரை, பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்தார்.
இந்நிலையில், இந்த கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. ஜோத்ஸ்னாவின் உறவினர்கள் உள்ளிட்ட கிறிஸ்துவ மதத்தினர், இத்திருமணத்தை எதிர்த்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் மதத்துப் பெண்ணை, 'லவ் ஜிஹாத்' எனப்படும், வலுக்கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்ததாக, ஷெஜின் மீது குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் கோழிக்கோடு மாவட்ட செயலர் மோஹனன் கூறியதாவது: சிறுபான்மையின சமூகத்தினரை ஒடுக்க, லவ் ஜிகாத் என்ற வர்த்தையை, வலதுசாரி அமைப்புகள் உபயோகிக்கின்றன. கலப்பு திருமணம் தனி நபர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடக்கும் நிகழ்வு. இதை சட்டமும் அனுமதிக்கிறது .இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, தன் உறவினர்களின் குற்றச்சாட்டை, ஜோத்ஸ்னா திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.