![](admin/uploads/.60b07eb3433621.41207656.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர் : 'திருப்பூர் மாநகராட்சி பள்ளியில், மாணவியரை மத மாற்றம் செய்ய முயன்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.
திருப்பூரை சேர்ந்த தம்பதி, வடக்கு போலீசில் நேற்று அளித்த மனு: திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி தமிழாசிரியை ஒருவர், ஆறாம் வகுப்பு படிக்கும் எங்கள் மகள் மற்றும் மாணவியரை மத மாற்றம் செய்ய முயல்கிறார். நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்சை கோர்த்த கயிறும் அணிந்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியை, ஹிந்து கடவுள்கள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வகுப்பு பிரார்த்தனையை கிறிஸ்துவ முறைப்படி செய்ய வற்புறுத்தியுள்ளார். இதை ஏற்று கொள்ளாத எங்கள் மகளை கடுமையாக திட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
தகவலறிந்த ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். 'மத மாற்றத்துக்கு முயன்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாணவியருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்டதற்கு, ''இந்த விஷயம் குறித்து விசாரித்து வருகிறோம். உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.