Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடமாட்டோம்: கே.எஸ்.அழகிரி

ஏப்ரல் 21, 2022 12:26

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடர்ந்து தமிழக மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. தலைமையிலான அரசுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இதனால், தமிழக மக்களிடையே ஆளுநர் மீது கடும் எதிர்ப்பும், கொந்தளிப்பான நிலையும் நிலவி வருகிறது.

இந்தநிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் காரணமாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு தமிழக அரசை முடக்குகிற நடவடிக்கையை கண்டித்துத் தான் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கவர்னருக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டுமென்று கூறியிருக்கிறார்.

ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட முறையில் தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணாமலை கூறுவதை அரை வேக்காட்டுத் தனமாகவே கருதுகிறேன்.

மத்தியில் ஆட்சி செய்கிறோம் என்ற மமதையில் ஆணவத்தோடு அவர் பேசுவாரேயானால், ஏற்கனவே பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழைய விடாமல் எதிர்த்து வருகிற தமிழக மக்களால், பா.ஜ.க. என்ற கட்சியை பூதக் கண்ணாடி கொண்டு தேட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டுமென்று முதல்-அமைச்சர், கவர்னரை நேரில் சந்தித்த தோடு, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட்ட பிறகும் கூட, அந்த மசோதாவை அனுப்பாமல் இருப்பது தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கிற செயலாகும்.

கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாவை மறுபடியும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பி 72 நாட்களாகியும், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் முடக்கி வைப்பதற்கு அரசமைப்புச் சட்ட விதி 200-ன்படி அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

அவரது செயல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. தமிழகத்தில் பா.ஜ.க, தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுமேயானால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். தமிழக கவர்னரின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் வருகிற 28-ந்தேதி நடத்தப்படும்.

இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் மற்றும் பெருந்திரளானோர் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்