Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை, ஏப்.22: தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் பார்த்திப மகாராஜன் உடல் நலக்குறைவால் நேற்று முன் தினம் அதிகாலை காலமானார்.
தமிழ் பத்திரிகை உலகில் நீண்ட கால அனுபவமும் செய்திகளை செம்மையாக மாற்றும் வல்லமையும் செய்திகளுக்கான தலைப்புகளை தருவதில் பெரும் திறமையும் கொண்டிருந்தவர் மூத்த பத்திரிகையாளர் தினமலர் செய்தி ஆசிரியர் திரு.பார்த்திப மகாராஜன்.
கடந்த 37 ஆண்டுகளாக பத்திரிகைத்துறையில் பணியாற்றிய பார்த்திபன் (வயது 58) கடந்த சில வருடங்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக மதுரை மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பிறகும் இதழியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் 30.3. 2022 தேதியன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றி வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று (21.4.2022 ) அதிகாலை 12.45 மணிக்கு காலமானார் . அவரது உடல் சொந்த ஊரானா திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறப்புக்கு பத்திரிகைதுறையை சேர்ந்த அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி கிராமத்தில் 30.5.1963 ஆம் ஆண்டு பிறந்த பார்த்திபன், மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் (1980-83) இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்தார். அங்கு வேலஸ் ஹால் என்ற ஹாஸ்டலில் தங்கி படித்த அவர், அப்போதே எழுத்து துறை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அப்போதே MAG (Magazine என்பதன் சுருக்கம்) என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தினார். அதற்கு அவரே எடிட்டர். இதழியல் துறையின் மீது ஆர்வம் கொண்ட பார்த்திப மகாராஜன் மதுரை, திருச்சி நெல்லை வேலூர் உட்பட தமிழகத்திலுள்ள தினமலர் பத்திரிகையில் செய்தி ஆசிரியராக பணிபுரிந்தவர்.