Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: அகமதுநகர் மாவட்டம் பார்னர் பகுதியில் உள்ள நிகோஜ் கிராமத்தை சேர்ந்த ருக்மணி என்ற இளம்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வேறு சமூகத்தை சேர்ந்த மங்கேஷ் ரன்சிங்கை திருமணம் செய்தார்.
மகள் கலப்பு திருமணம் செய்தது இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனினும் திருமணம் செய்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இது ருக்மணி குடும்பத்தினரின் கண்ணை உறுத்தியது.
கலப்பு திருமணம் செய்த இளம்பெண் கணவருடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவதை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
எனவே சம்பவத்தன்று பெண்ணின் சித்தப்பா, பெரியப்பா மற்றும் மாமா உள்ளிட்ட உறவினர்கள் தம்பதியை பிடித்து அவர்கள் உடலில் பெட்ரோலை ஊற்றினர். பின்னர் ஈவு இரக்கமின்றி தம்பதியை உயிரோடு தீவைத்து கொளுத்தினர்.
வலியால் அலறி துடித்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புனே சசூன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், ருக்மணி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். கவலைக்கிடமான நிலை யில் உள்ள மங்கேஷ் ரன்சிங்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் உறவினர்களை கைது செய்து உள்ளனர். மேலும் தலை மறைவாக உள்ள பெண்ணின் தந்தையை தேடிவருகின்றனர்.
கலப்பு திருமணம் செய்த தம்பதி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.