Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டின் பாதுகாப்பு சவால்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும்: புதிய ராணுவ தளபதி உறுதி

மே 01, 2022 04:10

புதுடெல்லி: நாட்டு முன் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நேற்று(ஏப்.,30) பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து இன்று, டில்லி, தெற்கு பிளாக் பகுதியில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரி, விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டபின்னர் மனோஜ் பாண்டே கூறியதாவது: இந்திய ராணுவத்தை வழிநடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமையாகவும், கவுரவமாகவும் இருக்கிறது. அதை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். பணிவு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளுக்கு இந்திய ராணுவம் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது.

தற்போதைய, சமகால மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தின் தயார்நிலையை உறுதி செய்வதே எனது முதல்பணி. உலகளாவிய புவிசார் அரசியல் நிலைமை வேகமாக மாறி வருகிறது. இதனால், நம்முன் பல சவால்கள் உள்ளன. விமானப்படை, கடற்படையுடன் ஒருங்கிணைந்து மற்றும் ஒத்துழைப்புடன் எந்த சூழ்நிலையையும் ராணுவம் சமாளிக்கும்.

ராணுவத்தில் சுயசார்பை எட்டுவதற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், தற்போதைய சீர்திருத்தங்கள், மறுசீரமைப்பு மற்றும் மாற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆயுத படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே எனது நோக்கம்.முந்தைய தளபதிகள் மேற்கொண்ட நல்ல பணிகளை முன்னெடுத்து செல்வதுடன், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் நலன் உறுதி செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்