Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகில் உள்ள பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாராயணன், முகேஷ் ஆகிய இருவரும் இன்று மதியம் ஒரு மோட்டார் சைக்கிளில் மண்டபத்தில் இருந்து பாம்பன் நோக்கி கடலில் அமைந்துள்ள பாம்பன் பாலம் வழியாக சென்றனர். பாலத்தில் நடுவில் வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. கார் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த முகேஷ் 200 அடி உயர பாலத்தில் இருந்து கடலில் தூக்கி வீசப்பட்டு தத்தளித்தார். நாராயணன் பாலத்தில் விழுந்து படுகாயமடைந்தார்.
கடலில் விழுந்த முகேஷ் தத்தளித்தவாறு உயிருக்கு போராடினார். இதனை அப்பகுதியில் இருந்த மீனவர்கள் பார்த்ததும் உடனடியாக கடலில் குதித்து கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வாலிபர் முகேசை கயிறு கட்டி மீட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். அவரது காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பாம்பன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த நாராயணன், முகேஷ் ஆகியோரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை ஓட்டி வந்தவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த அமராவதி புதூரைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்று தெரியவந்தது.