Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்பெண்ணை ஆறு நீர்பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் முழு உரிமை கோர முடியாது: தமிழக அரசு

மே 08, 2019 05:40

புதுடெல்லி: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு தமிழக அரசு தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

தென்பெண்ணையாறு கர்நாடகா மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான ஆறு அல்ல. இந்த ஆறு தமிழகத்திலும் பெரும்பகுதி ஓடுவதால் கர்நாடகா மாநிலம் இதற்கு முழு உரிமை கோர முடியாது. எனவே தென்பெண்ணை ஆற்றில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமான பணிகள் ஆய்வுகள் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு மேற்கொள்ள அனுமதிக்க கூடாது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு முயற்சிக்கும் கர்நாடகா, குறிப்பாக பெங்களூரு, கோலார் உள்ளிட்ட மாவட்ட குடிநீர் பயன்பாட்டுக்காக கட்டுவதாகவும், அதற்கு முழு உரிமை உள்ளது எனவும் இதுதொடர்பாக பிற மாநிலத்திடம் அனுமதி பெறவேண்டியதில்லை எனவும் கூறுவது ஏற்புடையது அல்ல.

ஏனெனில் 1892 நீர்பங்கீடு ஒப்பந்த அடிப்படையில் கீழ்ப்பகுதி மாநிலங்களின் அனுமதி பெறாமல் ஆற்றின் குறுக்கே எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது. அதை கர்நாடகா மீறி உள்ளது. மத்திய சுற்றுசூழல் அமைச்சகம், கர்நாடகாவின் திட்டத்துக்கு தமிழக அரசின் கருத்தை கேட்காமல் ஒப்புதல் அளித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குடிநீர் தேவைக்காக தடுப்பணை கட்டுவதாக அனுமதி பெற்று, ஆற்றின் மொத்த நீரோட்டத்தையும் கர்நாடகா திசைமாற்ற முயற்சிக்கிறது. இந்த கட்டுமானத்தால், தமிழகத்தில் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பியுள்ள 5 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வறட்சியும், குடிநீர் பஞ்சமும் ஏற்படும்.

மேலும் கர்நாடகா தொடர்ந்து பெண்ணையாற்றில் கழிவுநீரை விடுவதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைகிறது. அதை தடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்