Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் சிக்கலை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் இதேபோன்று ஜிஎஸ்டிபி- கடன் அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக பெரும் தொகைய செலவு செய்யும் மாநிலங்கள் வளர்ச்சி திட்டங்களுக்காக நம்பி இருப்பது கடனை தான்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் உலகளாவிய பொருளாதார சிக்கலை அதிகரித்துள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. ஏற்கெனவே பொருளாதாரம் வேகமெடுத்துள்ளதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகின்றன.