Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி-'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சட்டங்கள் இயற்ற, மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும் சீரான வரி விதிப்பு முறையை தர, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது.வரி விதிப்பில் மாற்றம் செய்ய, மத்திய நிதி அமைச்சர் தலைமையில், மாநில அமைச்சர்கள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடி முடிவு செய்கிறது.இந்நிலையில், கடல் சார் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு, ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், அந்த வரி விதிப்புக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.அப்போது, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:ஜி.எஸ்.டி., விவகாரத்தில் சட்டங்கள் இயற்ற, மத்திய - மாநில அரசுகளுக்கு சமமான, அதே நேரத்தில் ஒருங்கிணைந்த அதிகாரம் உள்ளது. ஜி.எஸ்.டி., கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுகள், மத்திய - மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது.
அதே நேரத்தில் இணக்கமாக செயல்படுவதற்கு அந்த முடிவுகள் உதவும்.மாநிலங்களுக்கு இடையே மோதல், பிரச்னை ஏற்படும்போது, அதற்கு தீர்வு காண்பதற்காகவே, கூட்டாட்சி தத்துவத்தில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை, நம் அரசியல் சாசனம் வழங்கிஉள்ளது.அதுபோலவே, ஜி.எஸ்.டி., கவுன்சிலில், கூட்டு விவாதங்கள் மூலமே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில், ஒரு தரப்புக்கு சற்று அதிக அதிகாரம் தேவை. நம் நாட்டின் கூட்டாட்சி தத்துவம் என்பது, ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழையாமை கலந்தது; கலந்து பேசியே தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.