Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

மே 23, 2022 01:31

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (மே 24) தொடங்குகிறது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைய உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 6 காலியிடங்கள் உருவாக உள்ளன.

குறிப்பாக, திமுகவின் டி.கே.எஸ்.இளங்காவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. விரைவில் குடியரசுத் தலைவர்பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்கு தேவைஎன்பதால், இந்த 57 இடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி, ஜூன் 10-ம் தேதிமாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வரும் 31-ம்தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. மாநிலங்களவைத் தேர்தல், சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி, ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு 4, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு 2 உறுப்பினர் இடங்கள் கிடைத்துள்ளன.

இதில், திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு, சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஒப்பந்தப்படி ஒரு இடத்தை வழங்கியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன்,கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்ஆகியோர் அறிவிக்கப்பட்டுவிட்டனர். காங்கிரஸ் கட்சி தனது ஒரு இடத்துக்கான வேட்பாளரையும், அதிமுக தனது 2 இடங்களுக்கான வேட்பாளர்களையும் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அலுவலராக சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பணியாற்றுகிறார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நாளை காலை முதல் வேட்புமனுப் படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்