![](admin/uploads/.5ea6c3a269aff5.74647657.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தினாலும் தமிழகத்தில் சென்ற ஆண்டு வசூலித்த கட்டணமே தொடரும் அதில் மாற்றம் இருக்காது என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயா்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அதன்படி, பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கான கட்டணம் ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.79,600ம் அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.1,41,200ம் அதிகபட்சமாக ரூ.3.34 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்ற ஆண்டு வசூலித்த கட்டணமே தொடரும், அதில் மாற்றம் இருக்காது. ஏஐசிடிஇ சொல்லி இருந்தாலும் கூட தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும். ஏஐசிடிஇ சொல்வதை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த புதிதாக 10 பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.