Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விலை குறைந்த பேட்டரி

மே 31, 2022 12:00

புதுடெல்லி: மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக, இயந்திரக் கருவி மூலம் ரீசார்ஜ் செய்யக் கூடிய ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கும் பணியை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: புதிய பேட்டரி தொழில்நுட்ப காப்புரிமைக்காக விண்ணப்பித்த ஆராய்ச்சியாளர்கள், ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்க பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில் இவை சிக்கனமானவை மட்டுமின்றி நீண்ட ஆயுட்காலம் கொண்டவையாகும். ஜிங்க்-ஏர் பேட்டரிகளை இரு சக்கர, மூன்று சக்கர மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியும்.

சீனா ஆதிக்கம்: இந்திய அரசின் சாதகமான கொள்கைகள் மற்றும் மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்றவற்றால் இந்திய மின்சாரத் துறை அண்மைக் காலமாக மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. மின்சார வாகனங்களில் பெரும்பாலும் லித்தியம்-அயன் பேட்டரிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம்-அயன் பேட்டரிகளின் பெருமளவில் உற்பத்தி செய்யும் சீனா, மின்சார வாகன பேட்டரி உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது, இந்திய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்து தான் லித்தியம்-அயன் பேட்டரிகளை இறக்குமதி செய்கின்றன.

ஜிங்க்-ஏர் பேட்டரி: லித்தியம்-அயன் பேட்டரிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், குறிப்பிட்ட அளவு மட்டுமே கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு வரம்புகள் உள்ளன. தவிர, இந்திய சந்தையின் வெவ்வேறு தேவைகளை லித்தியம்-அயன் பேட்டரிகளால் மட்டுமே பூர்த்தி செய்துவிட முடியாது. லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றான ஒன்றை, குறைந்த செலவில் உருவாக்கும் முயற்சியில் ஐ.ஐ.டி.மெட்ராஸ்-ன் ரசாயனப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியரான டாக்டர் அரவிந்த் குமார் சந்திரன் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். துத்தநாகம் பரவலாகக் கிடைக்கக் கூடியது என்பதால், ஜிங்க்-ஏர் பேட்டரிகளில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எதிர்கால மாதிரி: தங்கள் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் ரசாயனப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர். அரவிந்த் குமார் சந்திரன் கூறுகையில், "மின்சார வாகனங்களுக்கான ஜிங்க்-ஏர் பேட்டரிகளுக்கு எதிர்கால மாதிரியை உருவாக்கும் பணியில் எங்கள் ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டுள்ளது. தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை சரிசெய்வதற்கான வழிகளையும் நாங்கள் கண்டறிந்து வருகிறோம். ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் தற்போது ஜிங்க்-ஏர் செல்களை உருவாக்கி, மின்சார வாகனங்களுக்கான ஜிங்க்-ஏர் தொகுப்பாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜிங்க்-ஏர் பேட்டரிகளில் மிகப் பெரிய நன்மை உண்டு. ஏனெனில், லித்தியம்-அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தும்போது ஒட்டுமொத்த பேட்டரி தொகுப்பையும் அகற்றிவிட்டு, முழுமையான லித்தியம்-அயன் பேட்டரிகளை பரிமாற்றம் செய்ய வேண்டும். இதனால் லித்தியம்-அயன் பேட்டரிகளில் மூலதன முதலீடு இருமடங்காக அதிகரிக்கிறது" என்றார்.

ரீசார்ஜ் நிலையங்கள்: பெட்ரோல் நிலையங்களைப் போன்று, 'ஜிங்க் ரீசார்ஜ் நிலையங்களை' தனியாக அமைக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஜிங்க்-ஏர் பேட்டரிகளைப் பயன்படுத்துவோர் பேட்டரி தீர்ந்துவிடும்போது, பெட்ரோல் மையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிச் செல்வதைப் போன்று இந்த நிலையங்களுக்கு வந்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 'பேட்டரி பரிமாற்றம்' என்ற அடிப்படையிலான தொழில்நுட்பத்தில், வாகன ஓட்டிகள் தங்களிடம் உள்ள 'ஜிங்க் கேசட்'களுக்கு பதிலாக முழுவதும் ரீசார்ச் செய்யப்பட்ட 'ஜிங்க் கேசட்'களை 'ஜிங்க் ரீசார்ஜ் நிலையங்களில்' மாற்றிக் கொள்ளலாம். பயன்படுத்தப்பட்ட 'ஜிங்க் கேசட்'களை சூரியஒளித் தகடுகள் (solar panels) மூலம் ரீசார்ஜ் செய்யவும் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.இதன் முக்கியத்துவம் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ்-ன் ஆராய்ச்சி மாணவரான அகில் கொங்கரா கூறும்போது, "எங்கள் திட்டத்தின்படி மின்சார வாகனப் பயனாளர்கள் 'ஜிங்க் கேசட்'களைப் பரிமாற்றம் செய்து கொள்ள 'ஜிங்க் ரீசார்ஜ் நிலையங்களில்' சில நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டியிருக்கும்" என்றார்.

ஜிங்க்-ஏர் பேட்டரிகள் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளின் செயல்பாட்டு பாதுகாப்பு பற்றி ஐஐடி மெட்ராஸ்-ன் மற்றொரு ஆராய்ச்சி மாணவரான குஞ்சன் கபாடியா கூறுகையில், "இந்திய சூழலுக்கு ஏற்ற வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஜிங்க்-ஏர் பேட்டரிகளில் நீரிய மின்பகுளி (aqueous electrolyte) இருப்பதால் மிகவும் பாதுகாப்பானவை. மின்சார வாகனங்கள் விபத்தில் சிக்கும் மோசமான தருணங்களில் கூட இவை தீப்பிடிக்காது" என்றார்.

ஜின்க்-ஏர் பேட்டரிகளின் நன்மைகள் வருமாறு:
துத்தநாகம் இந்தியாவில் பரவலாகக் கிடைக்கக் கூடியது.
லித்தியம்-அயன் பேட்டரிகளின் இறக்குமதியைக் குறைக்கும்.
லித்தியம்-அயன் பேட்டர்களோடு ஒப்பிடுகையில், துத்தநாகம் விலை குறைந்தது.
லித்தியம்-அயன் பேட்டரிகளின் விலை 200 டாலர்கள் முதல் 250 டாலர்கள் ($200 to $250 a KWhr),ஆனால் ஜிங்க்-ஏர் பேட்டரிகளின் விலை 150 டாலர்கள் ($150 KWhr). அதிகளவில் பயன்பாட்டிற்கு வரும்போது இதன் விலை 100 டாலருக்கும் கீழே ($100 KWhr) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிங்க்-ஏர் பேட்டரிகள் நீரின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை, நீண்ட ஆயுள் கொண்டவை
ஜிங்க்-ஏர் பேட்டரிகள் நல்ல செயல்திறனைக் கொண்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்