Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள்: ஸ்வாதிஸ்ரீ

மே 31, 2022 11:05

கோவை;''விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள்,'' என, குடிமைப்பணித் தேர்வில் வென்ற மாணவி ஸ்வாதிஸ்ரீ தெரிவித்தார்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு, கடந்த ஜனவரியிலும், வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு ஏப்., மாதமும் நடந்தது. இறுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், 685 பேர் தேர்ச்சி பெற்றனர்.கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசிய அளவில், 42-வது இடம் பிடித்துள்ளார்.
கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் - லட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஸ்வாதிஸ்ரீ, 25, இளங்கலை வேளாண் பட்டதாரி. கோவை வேளாண் பல்கலையின் கீழ், தஞ்சாவூரில் தனியார் வேளாண் கல்லுாரியில், இளங்கலை வேளாண் பட்டம் பெற்றவர்.ஐ.ஏ.எஸ்., தேர்வு மூன்றாவது முறையாக எழுதி வெற்றி பெற்றுள்ளார்.ஸ்வாதிஸ்ரீ கூறியதாவது:தேசிய அளவில், 42வது இடம், தமிழக அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தாத்தா - பாட்டி வேளாண் தொழிலில் ஈடுபட்டதை பார்த்து ஆசைப்பட்டே, வேளாண் படிப்பில் சேர்ந்தேன். பட்டம் பெற்ற பின் குடிமைப்பணித் தேர்வு எழுதினேன்.
சென்னை மனிதநேய அறக்கட்டளை, அறம் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை பெற்றேன். முதல் முறை எழுதிய தேர்வில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இரண்டாம் முறை தேசிய அளவில், 126வது இடம் பிடித்து ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வானேன்.ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பதால் மூன்றாவது முறையாக தேர்வு எழுதினேன். இதில் தேசிய அளவில், 42வது இடம் பிடித்துள்ளேன். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை தருவேன். விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை கண்டறிந்து, அதை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே எனது குறிக்கோள்.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்