Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்களின் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கை : அமித் ஷா பெருமிதம்

மே 31, 2022 12:19

புதுடில்லி: ''தங்களின் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை மோடியின் எட்டு ஆண்டு கால ஆட்சி மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.  மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை பா.ஜ.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மோடியின் எட்டு ஆண்டுகால ஆட்சி குறித்து மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான அமித் ஷா கூறியதாவது: மோடி பிரதமராவதற்கு முன் மக்களிடம் நாட்டின் மீது அவநம்பிக்கைதான் அதிகமாக இருந்தது. ஆனால் எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் நிலைமை மாறியுள்ளது. தங்களின் கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு வலிமையான தலைமை அமைந்துள்ளது மக்களுக்கு பெருமையையும் பாதுகாப்பையும் தந்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.இதற்கிடையே மோடியின் எட்டு ஆண்டு கால ஆட்சி நிறைவு கொண்டாட்ட பாடலை பா.ஜ. டில்லியில் நேற்று வெளியிட்டது. மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி தர்மேந்திர பிரதான் அனுராக் தாக்குர் ஆகியோருடன் இணைந்து பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாடலை வெளியிட்டார். 'நவீன இந்தியாவை உருவாக்கியவர் பிரதமர் மோடி' என அந்த பாடல் வர்ணித்துள்ளது.இதுபற்றி நட்டா கூறியதாவது:எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கலாசாரம் மாறி உள்ளது. சேவை நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலன் ஆகியவையே மோடி அரசின் ஆன்மாவாக உள்ளது, என்றார்.

தலைப்புச்செய்திகள்