Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்காததால் விரக்தி: புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

மே 08, 2019 09:38

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் சந்தோஷ்குமார்(வயது 26). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சந்தோஷ்குமார் திருமணமாகி கடந்த ஒரு வாரமாக மேற்கு மாம்பலம் பரோடா தெருவில் மனைவி மீனாவுடன்(24) வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற அசோக் நகர் போலீசார் சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தோஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சந்தோஷ் குமாரும் விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூரை சேர்ந்த மீனாவும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சந்தோஷ்குமாரின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தோஷ்குமாரின் பெற்றோர் அவருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனை அறிந்த மீனா சந்தோஷ்குமார் வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இவர்கள் இருவரும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் வைத்து கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் வாடகை வீட்டில் குடியேறினர்.

மீனா அசோக் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். பெற்றோர் தன் காதல் திருமணத்தை ஏற்கவில்லையே என நினைத்து சந்தோஷ்குமார் சில நாட்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் மீனா திருவள்ளூரில் உள்ள கோவிலுக்கு சென்று வருவோம் என சந்தோஷ்குமாரை அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால் மீனா மட்டும் தனியாக கோவிலுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அன்று இரவு மீனா, சந்தோஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் சந்தோஷ்குமார் எடுக்கவில்லை. இதனால் அருகில் வசிப்பவர்களிடம் தன் கணவரை தனது செல்போன் அழைப்பை எடுக்க சொல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் சந்தோஷ்குமாரின் வீட்டிற்கு சென்றபோது, சந்தோஷ்குமார் அவரது அறையில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

தலைப்புச்செய்திகள்