Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுற்றுச்சூழலை பாதுகாக்கநீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

மே 31, 2022 04:20

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு இன்று நடந்தது. வனத்துறை தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சையது முஸமில் அப்பாஸ் வரவேற்றார். வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ பேசும்போது, ''வன உயிரின பாதுகாப்புக்கு மாநில அரசு முன்னுரிமை அளித்து செயலாற்றுகிறது. பிராஜெக்ட் டைகர் மற்றும் பிராஜெக்ட் எலிஃபன்ட் திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துகின்றன. வன விலங்குகளால் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் இழப்பீடு ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி மாநில அரசு வழங்குகிறது. வன வளத்தை மீட்டெடுக்க அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், வனத்துறை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது, ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு பயனளிக்கும்.

தமிழகத்தில் தற்போது வனப்பரப்பு 23.7 சதவீதமாக உள்ளது. வரும் 10 ஆண்டுகளில் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாறுபாட்டை கண்டறியும் வகையில் அண்ணா பல்லைக்கழகத்தில் காலநிலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் முதுமலை உட்பட 3 வன விலங்குகள் மீட்பு மற்றும் மறு வாழ்வு மையம் அமைக்கப்படுகிறது'' என்றார்.
மாநாட்டை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தொடங்கி வைத்து பேசியதாவது: ''வனத்தை அழித்தால் நாமும் அழிந்து விடுவோம். வனங்களை பாதுகாக்கவே நீதித்துறை உத்தரவுகளை பிறப்பிக்கிறது. மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில், அதிக வனப்பரப்பை கொண்ட பகுதிகளில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. வனங்களில் களைசெடிகள், அந்நிய தாவரங்கள், பாட்டில்களை ஆகியவற்றை அகற்ற மனித ஆற்றல் மற்றும் நிதியும் தேவைப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு மக்களிடம் இருந்தால், இந்த நிதியை வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தலாம்.இதனால், சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். காலநிலை மற்றத்தால் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படுகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அவற்றை சீரமைக்க வேண்டும். தமிழகத்தில் அதிகளவில் நீர்நிலைகள் உள்ளன. ஆனால், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் பகுதிகளில் மக்கள் தண்ணீருக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது.

வனத்துறையினருக்கு பணிபுரிவதில் பல இன்னல்கள் உள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்கவே நீதிமன்றம் தலையிடுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க இரு துறைகளும் இணைந்து செயலாற்ற வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்காவிட்டால் பேரழிவுகளை தவிர்க்க முடியாது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசு முனைப்புடன் இருக்கிறது. சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் அவற்றை சீரமைப்பது முக்கியமாகும்.'' இவ்வாறு அவர் பேசினார். தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ரவீந்திரன் நன்றி கூறினார். மாநாட்டில், நீதிபதிகள் பவானி, என்.சதீஸ்குமார், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்