Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு எதிரான செயல்:ஓ.பன்னீர்செல்வம்

ஜுன் 01, 2022 06:20

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவிரி நதிப்படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து ஒரு முடிவு ஏற்படும் வரையில், தமிழ்நாட்டின் கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்ற கர்நாடக சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவைத் தீர்மானத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான செயல் ஆகும். இது நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு எதிரான செயல்.

தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே உரிய நீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்து வருகிறது. வரும் உபரி நீரையும் தடுக்கும் நோக்கில் 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடகா சொல்வதும், நதிநீர் இணைப்புத் திட்டத்தை முடக்கும் நோக்கத்துடன் செயல்படுவதும் முற்றிலும் நியாயமற்ற செயல்.

இந்த நியாயமற்ற செயலை அனுமதித்தால், கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு தற்போது வந்து கொண்டிருக்கும் உபரி நீரும் கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதன் விளைவாக காவிரி நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுவதோடு, வேளாண் தொழிலே முடங்கக்கூடிய அபாயம் ஏற்படும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் நிலைப்பாடு காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவிரி படுகை மாநிலங்களின் உரிய பங்கு என்பது ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி பெறவும், மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்தவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்