Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரியார் பல்கலைக் கழக துறைகள்மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் அரசியல் பரப்புரைகள் செய்ய தடை

ஜுன் 03, 2022 12:53

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக் கழக துறைகள்மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் அரசியல் சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டுஉள்ளது. இதற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சார்பில் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘பெரியார் பல்கலைக் கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகளின் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை பல்கலைக்கழகம், கல்லூரி வளாகத்தில் மேற்கொள்வதை முற்றிலும் தடை செய்யவேண்டும்.

மேலும், இதுதொடர்பாக மாணவர்களுக்குதகுந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதலைகளையும் வழங்கி, கல்வி பயில்வதில் மட்டுமே மாணவர்கள் முழு கவனம் செலுத்த வகை செய்ய வேண்டும். கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் எவ்விதமான அம்சமும் வளாகத்தில் இல்லை என்பதையும், பாதுகாப்பான சூழலில்தான் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர் என்பதையும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன் கூறியதாவது: மாணவர்களுக்கு அடிப்படைத் தேவைகள்,தேர்வுக் கட்டணம் உயர்வு, பாலியல் தொல்லைஉள்ளிட்ட பிரச்சினைகள் எழும்போது மாணவர்கள் அமைப்புகளே முன்னின்று போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் மாணவர்கள் போராடும்போது, அவர்கள்பழிவாங்கப்படும் நிலை உள்ளது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மாணவர்களுக்கு 3 மாதங்கள் வரை புத்தகம் வழங்கப்படாமல் இருந்தது. நாங்கள் நீதிமன்றத்தைநாடி புத்தகங்களை பெற்றுத் தந்தோம். இவ்வழக்கின்போது, மாணவர் அமைப்புகள் தேவை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

கல்லூரிகளில் அரசியல் இருக்கக்கூடாது என்றால், பெரியார் பல்லைக் கழக சிண்டிகேட் உறுப்பினர்களாக அரசியல் கட்சிகளின்எம்எல்ஏக்கள் ஏன் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் அறிவியல் பாடம் எதற்காக இருக்கவேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்கள் கல்லூரிகளில் ஊடுருவ முயன்றால், அதைத் தடுக்கலாம். மத்திய பல்கலைக்கழகங்களில் கூடவிதிக்கப்படாத தடை, மாநில பல்கலைக்கழகத்தில் விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்\கத்தக்கது. பெரியார் பல்கலைக் கழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேடுகள், முறைகேடுகள் உள்ளிட்டவற்றை மறைக்கவே, இதுபோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)தமிழ்நாடு பல்கலைக் கழக பொறுப்பாளர் கார்த்திகேயன் கூறும்போது, “மாணவர் அமைப்புகள் எப்போதும் மாணவர்கள் நலனுக்காகவே செயல்பட வேண்டும். ஆனால், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக மாணவர் அமைப்புகள் செயல்படக் கூடாது. மாணவர் நலன் சார்ந்த மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஏபிவிபி எப்போதும் துணை நிற்கும். மாணவர் அமைப்பு விவகாரத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் உத்தரவை ஏற்க முடியாது” என்றார்.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு எழுதியுள்ள கடிதம்விவரம்: மாணவர்கள் அரசியல் பேசினால் கல்லூரி வளாகம் பாதுகாப்பாக இருக்காது என்ற கருத்தாக்கம் மிகவும் தவறானது. கருத்துச் சுதந்திரத்தை ஒவ்வொருவருக்கும் உத்தரவாதப்படுத்துவதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை உறுதிப்படுத்துகிறது. கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை மக்களுக்கு அடிப்படை உரிமையாக இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

அரசியலை மாணவர்கள் விவாதிக்காமல் எவ்வாறு ஒரு வலுவான மக்களாட்சியை இந்தியாவில் உருவாக்க முடியும்? கல்லூரி,பல்கலைக்கழகங்களில் இத்தகைய விவாதம்நடத்தாமல் வேறு எங்கு இத்தகைய விவாதத்தைநடத்த இயலும்? இது கல்வியியல் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கை. பல்கலைக்கழக வேந்தர் என்பதாலோ, துணைவேந்தர் என்பதாலோ தான் விரும்பாத ஒன்றை மற்றவர் செய்யக்கூடாது என்று ஆணையிட முடியாது.

எனவே, துணைவேந்தரின் ஆணை அதை அடிப்படையாகக் கொண்ட பதிவாளரின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூறும்போது, “வராகி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக உயர் கல்வித்துறை இணைச் செயலர் வழங்கிய நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுஅனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்தான். வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது” என்றார்.

தலைப்புச்செய்திகள்