Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சியில், மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்தை விற்பனை செய்து கிடைத்த தொகையை, மாநகராட்சி நிர்வாகம், துாய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கியது.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் 'எனது குப்பை - எனது பொறுப்பு' மற்றும் நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் துவுக்க விழா நடந்தது.விழாவில், மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார், மேயர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், மாநகராட்சியின் 51 வார்டுகளில், சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்தை விற்பனை செய்ததில், கடந்த மாதம் கிடைத்த தொகையை, துாய்மை பணியாளர்கள் 50 பேருக்கு, தலா 500 ரூபாய் வீதம், மேயர் ராமநாதன் வழங்கினார்.
அதன் பின், அவர் பேசியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மக்கும், மக்கா குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. மக்காத குப்பையை அரியலுார் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கிறோம். மக்கும் குப்பையில் இருந்து, உயிர் உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைத்த தொகையை, துாய்மை பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறிய அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரப்பட உள்ளது. அதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.