![](admin/uploads/.61ecea33aeb7d0.41914331.jpg)
Friday, 28th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகும் எல்எச்பி பெட்டிகளை வங்கதேச அமைச்சர் ஆய்வு செய்தார். இந்தப் பெட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம், வங்கதேச ரயில்வேயை நவீனமயமாக்க இயலும் என்று அவர் தெரிவித்தார். வங்கதேச ரயில்வே அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் சுஜன், வங்கதேச ரயில்வே கூடுதல் தலைமை இயக்குநர் சர்தார் சஹாதத் அலி ஆகியோர் பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு (ஐசிஎஃப்) வந்தனர்.
ஐசிஎஃப்-ல் தயாராகும் எல்எச்பி பெட்டிகளைப் பார்வையிட்ட அவர்கள், விஸ்டடோம் சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டி,எல்எச்பி குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள், குளிர்வசதி செய்யப்பட்ட தானியங்கி ஆய்வு ரயில் பெட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஐசிஎஃப் ஏற்கெனவே மீட்டர்கேஜ் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, உணவறை, தபால், பார்சல் ரயில் பெட்டிகள்போன்றவற்றை வங்கதேச ரயில்வே-க்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வங்கதேச ரயில்வே அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் சுஜன் கூறும்போது, ‘‘வங்கதேச ரயில்வே தற்போது மீட்டர்கேஜ் தடத்திலிருந்து, அகல ரயில் பாதைக்கு மாறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனவே, ஐசிஎஃப் தயாரிக்கும் எல்எச்பி ரயில் பெட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம், வங்கதேச ரயில்வேயை நவீனமயமாக்க இயலும்.
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக, இலங்கை மற்றும் நேபாள ரயில்வே-க்கு ஐசிஎஃப் சமீபத்தில் ஏற்றுமதி செய்துள்ள டீசல் மின்தொடர் வண்டிகளை, வங்கதேச ரயில்வேயும் இறக்குமதி செய்ய விரும்புகிறது. விரைவில் வங்கதேச ரயில்வே அதிகாரிகள் கொண்ட உயர்நிலைகுழு ஐசிஎஃப்-க்கு வந்து, இதுகுறித்து ஆய்வு செய்யும்’’ என்றார். ஐசிஎஃப் பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.