Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சசிகலாவுக்கு அதிமுக.,வில் ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார்

ஜுன் 06, 2022 09:08

சென்னை: சசிகலாவுக்கு அதிமுக.,வில் ஒருபோதும் இடமில்லை எனவும், அவர் விரும்பினால் பா.ஜ.,வில் சேரலாம் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலாவை சேர்க்க மாட்டோம் என அதிமுக.,வினரும், அதிமுக.,விற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என சசிகலாவும் அடிக்கடி கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க பா.ஜ., எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சமீபத்தில் கூறுகையில், ‛சசிகலாவை அதிமுக சேர்த்துக் கொண்டால் அந்தக் கட்சி இன்னும் வலுவாக இருக்கும். சசிகலா பா.ஜ.,வுக்கு வந்தால் அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நிச்சயமாக அது எங்களுக்கு உறுதுணையாக இருக்கும். சசிகலா அதிமுக.,வுக்கு வரவில்லை என்றால் நாங்கள் பா.ஜ.,வுக்கு வரவேற்போம்' எனக் கூறினார்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை. இதுதான் எங்கள் நிரந்தர நிலைப்பாடு. பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என சிசகலா நினைக்கிறார். சசிகலா விரும்பினால் பா.ஜ.,வில் சேரட்டும். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமமுக.,வில் 4 பேர் மட்டுமே உள்ளனர்; மற்றவர்கள் அதிமுக.,விற்கு வந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்