Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தக்காளி விற்பனைக்கென தனி சந்தை அமைக்கப்படுமா?

ஆகஸ்டு 01, 2022 05:44

திருப்பூர் போடிப்பட்டி உடுமலையில் தக்காளி விற்பனைக்கென நவீன வசதிகளுடன் தனி சந்தை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தக்காளி சாகுபடி உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் ஆண்டு முழுவதும் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் விளையும் தக்காளிகளை விற்பனைக்காக உடுமலை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபாரிகள் வந்து தக்காளியை வாங்கிச் செல்கிறார்கள். 

உதாரணமாக, உடுமலை சந்தைக்கு நேற்று தக்காளி வரத்து தாறுமாறாக இருந்தது. ஏற்கனவே உற்பத்தி அதிகரித்து வரத்து அதிகரித்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் சந்தை விடுமுறை விடப்பட்டதால் நேற்று வரத்து மிக அதிகமாக இருந்தது. நிரந்தர தீர்வு தாங்கள் கொண்டு வந்த தக்காளியை விற்க முடியுமா இல்லையா என்ற தவிப்புடன் சந்தைக்கு வெளியிலேயே நீண்ட வரிசையில் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. 

இதனால் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்பது போல வந்த விலைக்கு தள்ளி விட வேண்டிய நிலை ஏற்பட்டது.சுமார் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.30 முதல் ரூ.60 வரையே விற்பனையானது. இது பறி கூலிக்கும் போக்குவரத்து செலவுக்கும் கூட போதுமானதாக இல்லாத விலையாகவே இருந்தது. 

இந்த அவல நிலைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய கட்டாயம் உள்ளது. தனி சந்தை உடுமலை பகுதியில் தக்காளிக்கென நவீன வசதிகளுடன் தனிச்சந்தை அமைக்க வேண்டும்.தக்காளி விவசாயிகள், கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் வியாபாரிகள் அந்த சந்தையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நுழைவாயிலில் சுங்கம் வசூலிக்கும்போதே ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு தக்காளி கொண்டு வந்திருக்கிறார் என்ற விபரத்தை பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கொருமுறை தக்காளி வரத்து குறித்த விவரங்கள் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் சென்றடைய வகை செய்ய வேண்டும்.

இது வரத்தை தெரிந்து கொண்டு வியாபாரிகளின் வருகையை அதிகரிக்க உதவும். மேலும் அந்த சந்தையிலே நவீன குளிர்பதனக்கிடங்கு அமைக்க வேண்டும். விலை குறைவாகக் கிடைக்கும் நாட்களில் அங்கு இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். இருப்பு குறித்த விவரங்கள் பதிவு செய்தவர்களுக்கு பகிரப்பட்ட வேண்டும். 

இதுதவிர விவசாயிகள் ஒருங்கிணைந்து தக்காளி பவுடர், ஜாம், சாஸ் போன்றவற்றை உற்பத்தி செய்யும் வகையிலான பயிற்சிகள், உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை வழிகாட்டல்கள் வழங்க வேண்டும். விலை இல்லாமல் ரோட்டில் கொட்டிச்செல்லுதல், தக்காளிச்செடிகளை டிராக்டர் விட்டு அழித்தல், கால்நடைகளை மேய விடுதல் என்பது போன்ற அவலங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்